Adsense

New Horizon Media புத்தகங்கள் இலவசமாக !!!


Unturnedpages சேவையைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம்.  அறியாதவர்கள் இந்த பதிவை படிக்கவும் . இப்போது இந்த சேவையின் விரிவாக்கமாக New Horizon Media புத்தகங்களை UnturnedPages சேவை மூலம் வழங்குகிறோம் - அதுவும் இலவசமாக. முதல் கட்டமாக 40 புத்தகங்கள் இலவசம் என்பதால் ஏதோ முற்றிய கத்திரிக்காய்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன என்று நினைக்க வேண்டாம் - இந்த புத்தக கண்காட்சியில் சக்கை போடு போட்ட “ராஜீவ் கொலை வழக்கு” புத்தகம் போன்ற முன்னனி புத்தகங்கள், இந்திரா பார்த்தசாரதி, வண்ண நிலவன் மற்றும் சுஜாதாவின் நாவல்கள், தீம் புத்தகங்கள் (விடுதலை புலிகள் குறித்து 3 புத்தகங்கள்/ திருநங்கைகள் குறித்து 2 புத்தகங்கள்), சில சுயசரிதைகள் என கவனமாக தேர்ந்தெடுத்த புத்தகங்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்படுகிறன.

இந்த சேவையை பயன் படுத்திக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.

1) புத்தகத்தை வாடகைக்கு எடுங்கள்

2) புத்தக விமர்சனத்தை 400 வார்த்தைகளுக்கு குறையாமல் உங்கள் வலைபதிவிலோ/ வலைதளத்திலோ எழுதுங்கள் - சுட்டியை எனக்குத் தெரியப்படுத்தவும். வலைபதிவோ தளமோ இல்லையென்றாலும் பரவாயில்லை - உங்கள் விமர்சனத்தை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்

3) படித்து முடித்தபின் புத்தகத்தை சேதமின்றி திருப்பி கொடுங்கள் - ஒரு சமயம் ஒரு புத்தகம் மட்டுமே வழங்கக்கூடிய நிலை இருப்பதால் சேதமின்றி திருப்பி கொடுத்தல் மற்றொரு புத்தகத்தை இலவசமாக பெற உங்களுக்கு உதவும்

4) இத்திட்டத்தின் கீழ் எடுக்கும் புத்தகத்திற்கு வாடகை தர வேண்டாம்

சரி, எந்த எந்த புத்தகம் இத்திட்டத்தின் கீழ் வரும் என்று கேட்கிறீர்களா ? புத்தகப்பட்டியல் UnturnedPages சேவையின் மூல தளமான இந்த சுட்டியில் இருக்கின்றது. புத்தகங்கள் தற்சமயம் இருக்கின்றதா இல்லையா என்ற விபரத்தையும் நீங்கள் இதில் பார்த்துக் கொள்ளலாம். 

புத்தகத்தை எப்படி பெறுவது என்ற modus operandi உங்களுக்குத் தெரியும் தானே ? இல்லையென்றால் UnturnedPages தொடர்பாக இதே வலைதளத்தில் நான் எழுதிய முந்தைய பதிவை படிக்கவும். 

இந்த சேவை இப்போதைக்கு சென்னையில் மட்டுமே !!!

இது தொடர்பாக எந்த சந்தேகம் இருப்பினும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

புதிய வருடமும் ஆங்கில கவிதைகளும்


புதிய வருடம் பிறந்திருக்கிறது. புதிய வருடத்தில் நான் சந்தித்த பெரிய பிரச்சனைகளில் ஒன்று - இந்த வருடத்தில் நீங்கள் செய்திருக்கும் தீர்மாணம் என்ன என்ற கேள்வி. என்ன பதில் சொல்வது இதற்கு - எதையாவது சொல்லிவிடலாம் தான். ஆனால் கொஞ்ச நாள் கழித்து நண்பர்களை பார்க்கும் போது உரையாடலே இங்கிருந்து தான் ஆரம்பிக்கும் - ”என்ன, ஜிம்மெல்லாம் எப்படி போகுது? எடை குறைச்சாச்சா ?” - மத்திய பிரதேசத்தில் புதிதாக இன்னொரு டயர் வேறு தோன்றியிருந்தால் கன்னா பின்னாவென்று வழிய வேண்டியிருக்கும். பொதுவாகவே இது போன்ற கேள்விகளிலிருந்து தப்பிக்கவே முயற்சி செய்வேன் - எதிர் கெள்வி கேட்பதன் மூலம். இதற்கும் ஒரு கேள்வி வைத்திருக்கிறேன்.

”இந்த வருடத்தில் நான் புது வருட தீர்மாணம் எதும் செய்யப்போவதில்லை என்று சொல்லி எந்த தீர்மாணமும் செய்யாமலிருந்தால் உண்மையிலேயே புதிய தீர்மாணம் செய்தவனாகிறேன். ஆனால் தீர்மாணம் செய்வதில்லை என்ற என் தீர்மாணத்தைப் பொய்யக்கவோ புதிய தீர்மாணம் செய்தாக வேண்டும் - இப்போது சொல்லுங்கள் நான் புது வருடத்தில் தீர்மாணம் எதும் செய்திருக்கிறேனா இல்லையா ?”

- இதை நாம் ஒரு முரண்படு மெய்மை (Paradox) என்று சொல்லலாம்.  இது ஒரு logical paradox.  இது போல பல Paradoxகள் அறிவியலில், தத்துவத்தில், கணிதத்தில், இலக்கியத்தில் இருக்கின்றன. மிகவும் சுவாரஸ்யமானவை -  ஒரு விளையாட்டைப் போல நாமே உருவாக்கலாம். இந்த முரண்பாட்டு மெய்மைக்கு எந்த பெயரும் இல்லை - வேண்டுமானால் Newyear Resolution Paradox என்று சொல்லிக் கொள்ளலாம். இதே போல Birthday paradox என்று ஒன்று உண்டு - அது கணிதத்தில் வழங்கப்படும் paradox - சுவாரஸ்யமானது; பல தளங்களில் அதன் பயன்பாடு இருக்கிறது.

Birthday paradox என்ன சொல்கிறதென்றால் ஒரு 57 பேர் கொண்ட குழுவில் ஒரு பிறந்த நாள் கொண்ட இருவர் இருப்பதற்கு 99 % வாய்ப்பு இருக்கிறதென்று. அதையும் நிகழ்தகவு கோட்பாட்டின் படி ஏறக்குறைய நிறுபிக்கின்றனர். இந்த 99 சதவிகிதம் 100 சதவிகதமாக ஆவதற்கு 366 நபர் கொண்ட குழு தேவை (சாதாரண கணிதம்). உண்மையில் ஒரு 57 பேர் இருக்கும் ஒரு பள்ளி வகுப்பறையில் ஒரே பிறந்த நாள் கொண்ட இருவர் இருந்து எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள் ? 

இந்த கணித குழப்படிகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு நிகழ் காலத்துக்கு வருவோம். இந்த விடுமுறை காலத்தில் நான் படித்த முக்கியமான புத்தகம் "Busy Bee Book of Contemporary Indian English Poetry" (Busy Bee Book, ISBN 978-81-87619-12-0) - இந்திய கவிஞர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. ஒரு முறை பிரசாத்-ஐ கூடல்திணை மின்னிதழ் குறித்து உரையாடும் பொருட்டு சந்தித்த போது அவரிடமிருந்து நான் வாங்கி வந்த புத்தகம் இது. மொழிபெயர்ப்பு இல்லை - ஆங்கிலத்திலேயே எழுதப்பட்ட கவிதைகள். ஆங்கில கவிதைகளை படிக்க விரும்புபவர்களுக்கு துவக்கப் புள்ளியாக இந்த புத்தகம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மிக சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த தொகுப்பு. அகராதியை வைத்துக் கொண்டு தான் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை - எளிமையானவை. இதில் முக்கியமான விஷயம் இந்த தொகுதியில் எழுதியிருக்கும் அத்தனை பேரும் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் - அவர்களின் வாழ்க்கை அவர்கள் பார்த்த விதத்தில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். மொத்தம் 17 பேர். பி. ராஜா மற்றும் ரீட்டா நாத் கேசரி தொகுத்திருக்கிறார்கள். புத்தக கட்டமைப்புக்கு இந்த புத்தகத்தை எடுத்துக் காட்டாக சொல்லலாம். ஒவ்வொருவரையும் பற்றியும் முழு பயோடேட்டா, புகைப்படம், அவர்களின் இதர படைப்புகள் குறித்த தகவல்கள் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். இது வரை நீங்கள் அறியாத ஒரு படைப்பாளியை நீங்கள் அறிந்து கொள்ள உங்களுக்குத் தேவையான எல்லா தகவல்களும் இதில் இருக்கின்றன.

ஷீலா குஜ்ராலின் கவிதைகள் நமது தற்காலிக வாழ்வியலை விமர்சிப்பதாய் இருக்கின்றன - கொஞ்சம் தேசியவாத சிந்தனைகளோடு. "The sting of Modernity" ஒரு tongue in cheek கவிதை. இவருடைய கவிதைகளுக்கு நான் ரசிகனாகி விட்டேன். பல் தேவ் மிஸ்ரா வின் கவிதைகள் தீர்க்கமாக இருக்கின்றன. அவரது In the theatre of Silence என்ற கவிதை சொற்களால் அறியப்படும் மனிதனின் நிலையை அழகாக முன் வைக்கிறது. இவருடைய கவிதைகளில் வார்த்தைகளுக்கு எப்பொழுதுமே ஒரு பாத்திரம் இருக்கின்றது - அவை சில சமயம் உதவாக்கரையாக சித்தரிக்கப்படுகின்றன. எனக்குப் பிடித்த ஒரு கவிதை (இந்த கவிதையை மெற்கோள் காட்டுவதில் காப்பிரைட் சிக்கல் இருக்காது என்று நினைக்கிறேன்)
How long I have to...
How long I have to address myself
with the same lousy words
hackneyed phrases and hollow slogans
I have been painted on a scrap of paper
in black ink, in one dimension only
face resting on the knees
waiting for the next season
what grows before my eyes
of colossal dimensions, i could never define !
There is nothing divine about it.
It is man who rises great heights but
crumbles down like a muddy wall
flows like nectar from here to there
from person to person

இதில் ராஜாவின் கவிதைகள் சுவாரஸ்யம் - பாண்டிச்சேரிகாரர். பெண் என்ற வடிவத்தை எப்படியெல்லாம் சிலாகிக்கிறார் மனிதர். அதிலும் ஒரு கவிதை பெண்ணின் மார்பை மட்டும் 13 விதமாக வர்ணிக்கிறது (வழக்கமான தலையணை, தர்பூசணி எல்லாம் உண்டு) ! சிகரெட்டை ஆணின் முத்தத்துக்காக காத்திருக்கும் வெள்ளைக்கார பெண் என்கிறார். Cold Steel என்ற கவிதை தத்துவார்த்தமாக இருந்தது. இவரது theory of relativity என்ற கவிதையை பார்த்த போது பிரமிள் எழுதிய E=MC^{2} என்ற கவிதை ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் இரண்டுக்கும் துளியும் சம்மதமில்லை - ராஜா சொல்வது மூக்குக்கும் மூக்குத்திக்குமான தொடர்பை பற்றி.

இந்த புத்தகத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு கவிஞரின் கவிதையைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு உண்டு. அந்த குறிப்பு கவிதையை  அணுக மேலும் ஏதுவாக இருக்கின்றது. குறிப்பாக மாணஸ் பக்‌ஷியின் கவிதைகள் முதல் வாசிப்பில் நெருக்கமாகவில்லை. அந்த குறிப்புகளை வாசித்த பின்னர் மீண்டும் கவிதையை வாசித்தால் எளிதாக இருக்கிறது. 2001இல் ”விக்கிரமாதித்யனின் கவிதை ரசணை” என்ற பெயரில் ஒரு புத்தகம் தமிழில் வந்தது - மருதா பதிப்பகம். இருபது கவிஞர்களின் கவிதை உலகை அறிமுகப்படுத்திய புத்தகம் இது. கவிஞரையும் கவிதையையும் பற்றியும் பாடம் நடத்தும் பாணியில் அமைந்த இந்த புத்தகத்தை கவிதைகளின் மாணவனாக ஆரம்ப படிகளில் நின்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு இந்த புத்தகத்தை நான் சிபாரிசு செய்வேன்.

அதற்கு பிறகு சமகாலத்தில், கவிஞர்கள் பலரின் கவிதைகளையும் தொகுத்து தமிழ் சூழலில் கவிதைகள் குறித்த ஒரு முழுமையான தோற்றத்தை தேற்றிக் கொள்ளும் வகையில் ”சிற்றகல்” தவிர்த்து வேறு வந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை (காலச்சுவடு கவிதைகள் போல ஒரே சிறு பத்திரிக்கையில் வந்த கவிதை தொகுப்புகளை நான் சொல்லவில்லை)

கவிதைகள் கிடக்கட்டும், இந்த புத்தாண்டில் உங்கள் தீர்மாணம் என்ன ?
_______________________

யுகமாயினி பிப்ரவரி இதழில் வெளியானது

ஆயிரத்தில் ஒருவன் - கற்பனையைக் கொண்டு ஒரு ரசவாத ஆராய்ச்சி


ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து நான் திரையரங்குக்குச் சென்றேன் - கடைசியாக சென்றது இந்த படத்தைப் பார்க்க.

ஆயிரத்தில் ஒருவனை அக்கு வேறு ஆணி வேறாக பார்த்து அனைத்து விதமான ஊடகங்களும் பிரித்து மேய்ந்து விட்ட நிலையில் தான் இந்த படம் பார்க்கச் சென்றேன் - இந்த படம் நான் பார்க்க வேண்டும் என்றும் நான் இது குறித்து எழுத வேண்டும் என்றும் வற்புறுத்திய சம்பத்துக்கு நன்றி. சம்பத், இந்த பதிவு உங்களுக்காக :-)

இந்த படத்துக்கு செல்வராகவனின்  முயற்சியும் உழைப்பும் மிகவும் அதிகம். கற்பனையை ரசவாதம் மூலம் திரைப்படம் என்ற வடிவத்திற்கு மாற்றி இருக்கிறார், செல்வராகவன். அவிழ்த்து விட்ட குதிரையைப் போல தாறு மாறாக பறக்கிறது. தனக்குத் தெரிந்த உலகத்தைச் சார்ந்த மனிதர்களைக் கொண்டு நமக்கு அறிமுகமாகாத ஒரு உலகத்தை படைக்க முயன்றிருக்கிறார். விளைவு ரத்தத்தோடும் குறுரத்தோடும் கற்பனையை தோய்த்து “சாப்பிடு” என்று இரண்டு ரொட்டித் துண்டை வீசியிருக்கிறார். 

என்னால் இந்த படத்தை நிராகரிக்க முடியவில்லை - இது தமிழுக்கு புதிது. இது போன்ற களம் தமிழ் சினிமாவில் வந்ததில்லை, இதில் இருப்பது போன்ற காட்சிகள் வந்ததில்லை. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த படம் - இந்த சுவாரஸ்யம் முற்றிலும் காட்சியமைப்பால் வந்ததே. கதையைக் கூட ஒரு விதமாக சில காட்சிகள் போனதும் பிடிபட்டுவிடுகிறது (இந்த திரைப்படத்தை எப்படியும் பார்ப்பேன் என்ற நம்பிக்கை இருந்ததால், எந்த விமர்சனமும் படிக்கவில்லை). கடைசி வரை காட்சிகளை அமைத்த விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

ஏதோ தன்னை சுற்றியிருப்பவர்கள் மேல் கடும் சினம் கொண்டு அமைத்த காட்சி போல இருக்கிறது ஒவ்வொரு பிரேமும் - மகா தீவிரமாக/ உக்கிரமாக இருக்கிறது. எத்தனை படத்தில் ஒரு பெண் தன் மார்ப்பை கசக்கும் காட்சியை பார்த்திருப்பீர்கள் ? இந்த படத்தில் வெட்டப்பட்ட தலைகளை போல வேறு எந்த படத்திலும் வெட்டப்பட்டிருக்காது. காட்சிக்குக் காட்சி இருண்மையும், அழுகுரலும், அலரலும் நிறைந்திருக்கிறது. இந்த காட்சியமைப்பே படத்தின் பலம் - இந்த கதையை நகர்த்திச் செல்லுதலும் இது தான்.

திரைப்படத்தை ஒரு அனுபவமாக மாற்றியது இந்த காட்சிகளே என்று சொல்லலாம்.ஆனால் அந்த அனுபவம் முழுமையானதாக இருக்க வேண்டும் உங்களை கட்டிப் போடுவதாக இருக்க வேண்டும். யோசிக்க செய்ய வைத்துவிட்டால் அந்த அனுபவமே உங்களுக்கு கசப்பானதாக மாறிவிடும். பல ஆங்கிலப்படங்களின் சாயல்கள் தெரிந்தாலும் அவற்றை எல்லாம் புறம் தள்ளி விடலாம். ஏதோ எடுக்க வேண்டும் என்று அது போல எடுக்காமல், கதையோடு ஒன்றச் செய்தவரை சரி.
ஆனால் காட்சிகளில் நம்பகத்தன்மை ? அதைப் பற்றி நம்மால் எந்த தமிழ் திரைப்படத்திலும் பேசமுடியாது. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சில பல இடங்களில் காட்சியமைப்பின் பிரம்மாண்டத்தை குலைக்கிறது. இது வரை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் எந்த தமிழ் படத்திற்கும் கை கொடுத்து நான் பார்க்கவில்லை. எல்லா திரைப்படத்திலும் அரைவேக்காட்டு கிராஃபிக்ஸ் தான் நமக்கு கிடைக்கின்றன. ஆயிரத்தில் ஒருவன் அதற்கு விதி விலக்கல்ல. மிருக வதை தடுப்புச் சட்டம் ஒரு நல்ல திரைப்படம் உருவாகாமால் எவ்வளவு தூரம் தடை செய்ய முடியும் என்பதற்கு ”ஆஒ” சிறந்த சாட்சி.

உணர்ச்சிகள் அற்ற ஒரு திரைப்படம் இது -  விடுதலைக்காக மட்டுமே ஏங்கும் அரசன், லட்சியத்தை மட்டுமே வேண்டும் பெண், தந்தையை மட்டுமே தேடும் ஆராய்ச்சியாளர், பணம் மட்டுமே சம்பாதிக்க வந்த கூலி தொழிலாளி - இப்படி மட்டுமேக்கள் படத்தை மிகவும் மெக்கானிக்கலாக ஆக்குகின்றன. இந்த உணர்ச்சியற்ற தன்மை inspiring characters கொண்டு செய்யப்படவேண்டிய ஒரு fantasy படத்தில் இருப்பது இந்த திரைப்படத்தை fantasy என்ற genre-இல் இருந்து விலக்குகிறது. ஆங்கிலப்படங்களுடன் நான் இந்த படத்தை தொழில் நுட்பத்திற்காக compare செய்ய விரும்பவில்லை. ஆனால் இப்படிபட்ட ஒரு உருவாக்கத்திற்காகவாவது செய்ய்து தான் தீர வேண்டும். உணர்ச்சிகளின் வறட்சி திட்டமிட்டு செல்வராகவன் செய்ததா இல்லை அது தானாக நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. 

இவ்வளவு ஏன் பிற்பாதியில், நான் சோழர்கள் பக்கம் சாய்வதா அல்லது பாண்டியர்கள் பக்கம் சாய்வதா என்று கூட பிடிபடவில்லை. யாருக்கும் எந்த பின்புலமும் செவ்வனே காட்டப்படவில்லை. படத்தின் கதாபாத்திரங்களுக்காக நீங்கள் ஏங்க வேண்டும் - சரித்திர நாயகர்களை முன் வைக்கும் போது  காட்டப்படவேண்டிய முக்கியமான அம்சம் அது. அலெக்சாண்டர் சாகும் போது மனது இரங்கும். மேக்ஸிமஸ் (கிளாடியேட்டர்) களத்தில் புலியை எதிர்த்து நிற்கும் போது மனது பதறும். இந்த படத்தில் இரங்கவும் இல்லை பதறவும் இல்லை. வேடிக்கை மட்டுமே பார்க்க தோன்றுகிறது - இப்படி வேடிக்கை பார்க்கும் போது தான் சலிப்பு வருகிறது; உண்மை புரிகிறது. செல்வராகவனையும் ஆயிரத்தில் ஒருவனையும் உச்சத்தை அடையவிடாமல் தடுத்தது எது என்று. தொழில் நுடபகோளாறோ காட்சியமைப்பில் கோளாறோ இல்லை - பலமில்லாத திரைக்கதை.

செல்வராகவன் ஒரு fulltoss பந்தில் மிகவும் technically correct defense ஆடிவிட்டார் என்று தோன்றுகிறது. பவுண்டரிக்கு அப்பால் அனுப்ப வேண்டிய கதைக்களம். அது. சோழர்கள் பாண்டியர்கள் என்ற அடையாளம் எதற்கு ? அவர்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மூத்த குடி என்று சொல்லியிருந்தால் சோழர்களின் வரலாறும் பாண்டியர்களின் வரலாறும் கண் முன்னே வந்து படம் பார்க்கும் போது “இது சரியில்லையே” என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்காமலாவது இருக்கும். தமிழீழ subtext கொண்டு வரவேண்டும், “புலி” அடையாளம் வரவேண்டும் என்பதற்காக சோழர்கள் என்று வலிந்து செய்தீர்களா, செல்வராகவன் ? 

படத்தில் மிகவும் முக்கியமான பல நிகழ்வுகள் வசனமேதுமில்லாமல், பின்னனி இசையை மட்டுமே கொண்டு நிகழ்கின்றன - கணக்கு வைத்துக் கொள்ளவில்லை, ஆனால் குறைந்தது 40 நிமிடமாவது வசனம் ஏதுமற்ற காட்சிகள் இருக்கும். எவ்வளவு பெரிய விஷயம் - பின்னனி இசை? காட்சியோடு கட்டிப்போடவில்லை. பின்னனியில் ஒலிக்கின்றது அவ்வளவே. 

தான் காக்கப்போகிறவன் என்பது கூலிக்கே தெரியவில்லை - அவனை விதியே இரண்டு முறை காப்பாற்றுகிறது (ரீமா சென் சுடும் போதும், நெருப்புக்குழியில் தள்ள முற்படும் போதும்); ஆனால் அந்த விதியின் பங்கை வைத்து நாடகம் எல்லாம் நடத்தவில்லை இயக்குனர் - மிகவும் subtle ஆக சொல்கிறார். உணர்ச்சிகள் ஏதுமில்லாத, ஹீரோயிசம் எதுவுமில்லாத  சாதாரண திரைப்படம் போல ஆகிவிட்டது. நாடகமும், ஹீரோயிசமும் இல்லாமல் ஃபேண்டசி எங்கிருந்து வரும். வெறும் அழுகுரலால் பேண்டசிகள் உருவாவதில்லையே - இந்த திரைப்படத்தில் யார் தான் protogonist ? இரண்டாம் பகுதியை பார்க்கும் போது படம் நிகழ்வதே பார்த்திபனுக்கும், ரீமாவுக்கும் நடுவில் தான். மற்றவர்கள் எல்லாரும் உப்புக்குச் சப்பாணி. இதில் சோழவம்சத்தை காக்கப் போகும் அந்த கூலியை ஒதுக்கியது நெருடுகிறது. அவர் கடைசி வரை தந்து பணி இன்னதென்று தெரிந்து செய்கிறாரா இல்லை தெரியாமல் செய்கிறாரா என்று புரியவில்லை.

ரீமா சென்னின் கதாபாத்திரம் என்னை குழப்படித்து விட்டது - சோழர்களின் பூசாரியின் மந்திரத்தை சிதைத்து அவரையே தூக்கியடிக்கும் மாயம் தெரிந்த ஒரு மாயக்காரியாலா சோழர்கள் செய்து வைத்த ஏழு பறிகளை கடக்க முடியாது - அப்படிபட்ட மாயக்காரி, எதற்காக சோழர்களை சண்டைப் போட்டு கொல்ல வேண்டும். அரசனை தணிமையிலிருக்கும் போது மாயத்தால் வீழ்த்தியிருக்க முடியாதா ? அந்த கடைசி சண்டைக் காட்சி - கோமாளித்தனம். எதற்காக மிகவும் முன்னேறிய ஆயுதங்களை கையாளத் தெரிந்த அந்த ஏழு அரச பரம்பரையினரும் ராஜாக்களைப் போல வேடமனிந்துக் கொண்டு கத்தியை வைத்துக் கொண்டு நிற்கின்றனர் ?

இந்த படம் செல்வராகவனின் கோபத்தை வெளிப்படுத்துவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது - அதீத  ஜோடனைகள்/ போலி தத்துவார்த்தம்; தசாவதாரம் என்ற நல்ல திரைக்கதையை கமல் 10 வேஷங்களை ஏற்று நடித்து திரைப்பட அனுபவத்தை குறைத்தது போல அற்புதமான கதைகளனை அனுபவமில்லாத குழுவை வைத்துக் கொண்டு அணுகி மிகவும் சாதாரண திரைப்பட அனுபவமாக மாற்றி விட்டார் இயக்குனர். இயக்குனருக்கு மிகச் சிறந்த டீம் அமையாதது குறித்து வருந்துகிறேன். ஒரு நல்ல இசையமைப்பாளரும், திரைக்கதை ஆசிரியரும்,  கிடைத்திருந்தால் ஆயிரத்தில் ஒருவன் நிச்சயம் ஆயிரத்தில் ஒரு படமாக வந்திருக்கும்.

இதே போல இன்னும் நிறைய படங்கள் வரவேண்டும், இன்னும் நிறைவாக. எத்தனை குறைப்பாடு இருந்தாலும் இந்த படம் ஒரு நம்பிக்கையை அளிக்கிறது, ஆறு சண்டை  ஏழு பாட்டு, இரண்டு செண்டிமெண்ட் மூன்று ஹீரோயின் என்று வைத்துக் கொண்டு பார்முலா பைத்தியகாரத்தனங்கள் வருவது எதிர்காலத்தில் குறையலாம். ஆயிரத்தில் ஒருவனை முன்னோடியாகக் கொண்டு இன்னும் நிறைய பேர் புதிய களத்தை நோக்கி புறப்படலாம். இன்னும் சிறந்த திரைப்படங்கள் தோன்றலாம். அந்த ஒரே விஷயத்திற்காக இந்த படத்தின் அபத்தங்களை மன்னித்து விடலாம். இப்படி ஒரு துவக்கத்தை ஏற்படுத்திய புள்ளி என்ற நிலைக்காகவே தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஆயிரத்தில் ஒருவன் இன்னும் இருபது ஆண்டுகள் நினைவில் வைத்துக் கொள்ளப்படும்.

இந்த படத்தைப் பாராட்டலாம் - திட்டலாம் - ஆனால் நிராகரிக்க முடியாது. It is better to be criticized than ignored என்று சொல்வார்கள். அப்படி தான் இந்த படத்திற்கு வரும் விமர்சனங்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும், செல்வராகவன்.
 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman