கையில் இருந்த ஆட்டத்தை எப்படி தோற்பது என்று இந்திய அணியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னர் நாம் கிண்டலாக பேசுவதுண்டு - அருமையாக ஆடிக்கொண்டு இருக்கும் போதே சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு U Turn அடித்து ஆட்டத்தைக் கோட்டைவிடுவோம். இப்போது அந்த பெருமையை சென்னை சூப்பர் கிங்க்ஸ்க்கு தரலாம்.
வெற்றி பெற 9.5 ரன்கள் ஒரு ஓவருக்கு எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஆடத்துவங்கி மிகவும் அற்புதமாக ஆட ஆரம்பித்தனர் - ஒரு கணத்தில் ஒரு ஓவர் பாக்கி இருக்கும் போதே வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்தேன். Irresponsible slogging இல்லாமல் மிகவும் பொறுமையாக அதே சமயத்தில் stroke play செய்து அணியை கடுமையான இலக்கை நோக்கி அழைத்து சென்றனர். முதல் விக்கெட் வீழ்ந்த பின்னும் ரைனாவும் ஹைடனும் திறமையாக ஸ்டிரைக் டொடேட் செய்து ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து மிகவும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் நிலைமையை தலைகீழாக மாற்றியது நமது சொந்த தவறுகளால் தான். டெல்லியின் பந்து வீச்சு அனுபவமில்லாத பந்து வீச்சு - அப்படிப் பட்ட பந்துவீச்சு இருந்ததால் தான் இந்த அளவிற்கு வர முடிந்தது. இப்படிபட்ட பந்து வீச்சை வைத்துக் கொண்டு டெல்லி வெற்றி பெற வேண்டுமானால் இன்று அடித்தது போன்ற இமாலய டார்கெட் set செய்தால் தான் முடியும். இல்லையேல் இரண்டாவது பேட்டிங் செய்ய வெண்டும். சிறிய டார்கெட் defend செய்ய அவர்களுக்கு நாக்கு தள்ளி விடும். இன்றைக்கு நமது பந்து வீச்சு சொதப்பியது மிகவும் துரதிருஷ்டமான் விஷயம். இன்றைக்கும் ஃபிண்டாஃப் அடிவாங்கியும் அவருக்கு நான்கு ஓவர் கொடுத்திருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. ஜோகிந்தரை பயன்படுத்தியிருக்கலாம். நாம் செய்த தவறுகளில் முக்கியமானது என்று நான் நினைப்பது இது தான். - இதையும் தவிர சில தவறுகள் உள்ளன. அதையும் பார்ப்போம்.
1) அணியின் தேர்வில் இன்றும் குழப்படி தான் - ஜோகிந்தர் சர்மா எதற்காக டீமில் இருக்கிறார் என்றே புரியவில்லை. ஒரே ஒரு ஓவர் போடுவதற்கா ? அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டியதில்லை என்றால் அந்த இடத்திற்கு ஒரு சராசரியான ஆல்ரவுண்டரை ஆட வைத்திருக்கலாம். என் சாய்ஸ் முரளி விஜய். வித்யுத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் - இல்லை என்றால் என்னுடைய சாய்ஸ் வித்யுத். அணியின் பலம் ஹைடனின் மீதும் ரைனா மேலும் அதிகமாக சார்ந்துள்ளது போல் ஒரு தோற்றம் ஏற்படிருக்கிறது - இவர்களைத் தவிர வேறு யாரும் அடிக்கவில்லை என்பது கவலைக்குரிய விஷயம்.
2) பேட்டிங் ஆர்டர் சொதப்பல் - தோனி 2 டவுன் ஆடுவது எதற்கு என்று புரியவில்லை. அதுவும் நல்ல அடித்தளம் கிடைத்த ஒரு ஆட்டத்தில். முதல் பந்திலிருந்து அடிக்கக் கூடியவர் அல்ல பத்ரி - அவர் 4 ஓவர்களில் 45 ரன்களில் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இறக்குவது பஞ்சமா பாதகத்தில் ஒன்றாக சேர்க்க வேண்டிய சமாச்சாரம். அவரால் அப்படி சோபிக்க முடியாது. ஒருகாலத்தில் முகமது கைஃப்பை இந்த இடத்திலேயே வைத்து ஒன் டே ஆட்டத்தில் அழித்தோம். சரியான பேட்டிங் ஆர்டர் என்று நான் கருதுவது - ஹைடன், பார்த்தீவ், ரைனா, பத்ரி, மார்க்கல், தோனி, ஃபிளிண்டாஃப், கோனி....ஃபிளிண்டாஃப் பேட்டிங் ஆர்டரில் பின் பகுதியில் வந்து அடித்து ஆடுவதே சிலாக்கியம் - அவர் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் - ஆனால், சராசரியான பேட்ஸ்மேன்
3) பீல்டிங் - Catches win matches - சிட்டரை விடுவதெல்லாம் கொடுமை ஸ்வாமி ! இன்றைய அட்டத்தில் மார்க்கல் விட்ட கேட்சுக்கு அவர் அடித்து மேட்ச் ஜெயித்துக் கொடுத்திருக்க வேண்டும் :-) அடுத்த ஆட்டத்திலாவது யாராவது சிட்டரை விடாமல் இருக்க வேண்டும் என்று பிள்ளையாருக்கு வேண்டிக் கொள்ளப் போகிறேன்.
4) Momentum இழந்தது - பத்ரி ஆட வந்தபோது ஓவருக்கு 8 ரன்கள் தான் எடுக்க வேண்டும் என்ற நிலை. மார்க்கலும், பத்ரியும் ஸ்ட்ரைக் ரொடேட் செய்து பிரஷரை கட்டுக்குள் வைத்தாலும் பவுண்டர்களும் சிக்ஸர்களும் அடிக்காமல் சொதப்பலாக ஆடியது தான் தோல்விக்கு பெரிய காரணம். இதில் என்ன சிக்கல் என்றால் மேட்ச் வின்னர் மார்க்கல் தான் - பத்ரி கிடையாது. ஆனால் பத்ரியால் எடுத்த எடுப்பிலேயே அடித்து ஆட முடியாது. அடிக்க வேண்டிய பொறுப்பு முழுதும் மார்க்கல் மேல் - ஆனால் மார்க்கலால் ரிஸ்க் எடுக்க முடியவைல்லை. இந்த இடத்தில் பத்ரிக்கு பதில் ஃபிளிண்டாஃப் இருந்தால் கதையே வேறு. மார்க்கல் மீது இவ்வளவு பெரிய பொறுப்பு விழுந்திருக்காது. இதனால் கடைசி 5 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்களை இழந்தது தனி சோகம்.
5) கிரிக்கெட்டின் அடிப்படையில் செய்த தவறுகள் - ஜோகிந்தர் சர்மாவால் கங்குலியைக்காட்டிலும் ஏன் இன்சமாம் உல் ஹக்கைக் காட்டிலும் கேவலமாக ஓட முடியும் என்று நான் நினைக்க வில்லை. கடைசி ஓவரின் முதல் பந்தில் மூன்று ரன்கள் எடுத்திருக்க வேண்டும் இல்லை என்றால் ஆல்பி மார்க்கலுக்கு முதல் பந்திலேயே ஸ்ட்ரைக் கொடுத்திருக்க வேண்டும். இரண்டும் செய்யவில்லை - காதலியோடு நிலவொளியில் கடற்கரையில் ஓடுவது போல ஸ்லோ மோஷனில் ஓடி இரண்டு ரன்னாக மாற்றியது எல்லாம் கொடுமை. தானே அடித்து விடுவது போல ஸ்டிரைக் எடுத்துக் கொண்டது தவறு. அதாவது பரவாயில்லை. நான்காவது பந்தில் ரன்னர் end-இலிருந்து சிங்கிளுக்கு பாலாஜி ஓடியது செம காமெடி.
சரி, சென்னையை திட்டி முடித்தாகிவிட்டது - பாராட்டோடு இந்த blog post-ஐ முடிக்கிறேன். AB இன்று ஆடியது மிகவும் அற்புதமான ஆட்டம் - முதலிலிருந்தே அடிக்கத் துவங்காமல் இரண்டு முக்கியமான விக்கெட்கள் வீழ்ந்த பிறகு sensible-ஆக ஆடி இறுதியில் அடித்து ஆட்டத்தின் விதியையே மாற்றி எழுதிவிட்டார். இன்றைய உண்மையான் ஹீரோ அவர் தான்.





No response to “IPL 2009 Match 9 - CSK Vs DD”
Post a Comment
Trackbacks
Leave a trackback